எந்த வேலையாக இருந்தாலும் கவனத்தை அதில் ஒருமுகப்படுத்த வேண்டியது அவசியம். உதாரணமாக தொலைக்காட்சி பார்க்கும்போது அருகிலிருப்பவர்கள் வளவளவென்று பேச நாம் அனுமதிப்பதில்லை. தொலைபேசியில் யாருடனாவது பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கீடுகள் வருவதை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால், வண்டி ஓட்டும்போது மட்டும் எது வேண்டுமானாலும் நமது கவனத்தைச்
சிதறடிக்க அனுமதிக்கிறோம். இது தவறு.
இதுவரையில் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் திறமையாக வண்டி ஓட்டியிருப்பதாக நாம் நினைக்கலாம். அந்த நினைப்பை அப்படியே விட்டுவிடுவோம். எத்தனையோ சின்னச்சின்ன நிகழ்வுகள் ஒரேயடியாக நமது கவனத்தைத் திருப்பிவிடவும், அதனால் உண்டாகும் தவறுகள் விபத்தில்
கொண்டுவிடவும் வாய்ப்புகள் உண்டு.
சாதாரணமாக நிகழக்கூடிய சில தவறுகள்.
1. வண்டி ஓட்டும் போது குளிர்பானம் குடிக்கிறோம். எதோ ஒரு சமயத்தில் அது உடையில் சிந்திவிட்டால், அனிச்சையாக நாம் கையை உதறக்கூடும். சட்டென்று கவனம் பாதையிலிருந்து விலகி கறைபடிந்த உடையின் மேல் செல்லக்கூடும். அந்த நேரத்தில், முன்னே மிகவும் நெருக்கமாக வண்டிகள் எதுவும் இருந்தால்?
2. நெரிசலான பகுதியில் வண்டி ஓட்டிச் செல்கிறோம். கைத்தொலைபேசி அழைக்கிறது. ஒரு கையில் தொலைபேசியும், மறு கையில் செலுத்து வளையுமாக (ஸ்டீரிங்), மொத்த போக்குவரத்திற்கும் இடைஞ்சலை உண்டாக்குகிறோம்.
3. நெடுஞ்சாலைகளில் போகும்போது குழந்தைகளுடன் சாதாரணமாக விளையாடிக்கொண்டே செல்கிறோம். சிறிய கவனச் சிதறலும், நூற்று இருபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வண்டிக்கு எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
4. அருகில் அமர்ந்திருப்பவருடன் பேசிக்கொண்டே செல்வது நமக்கு மிகவும் சாதாரணமான ஒன்று. ஊரில் பேருந்து ஓட்டுபவர் எப்பொழுதாவது வளவளவெனப் பேசினால் ஒத்துக்கொள்கிறோமா? “ரோட்டை பாத்து ஓட்டுங்க” என்று கட்டளை இடுகிறோம். ஆனால், நாம் மட்டும் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறோம். பேசுவது தவறில்லைதான்; அந்தப் பேச்சு உணர்வுகளைத் தூண்டி நமது கவனத்தை சிதறடிக்காத வரையில்.
5. புகை பிடிப்பதே தவறு. வண்டி ஓட்டும்போது புகைப்பது தவறிலும் தவறு.
6. எதாவது ஈயோ கொசுவோ வந்தால் உடனே அதை விரட்டுவதில் கவனம் செலுத்தக் கூடாது.
7. ஒலிநாடாவோ, வானொலியோ எதுவாக இருந்தாலும் ஓரளவிற்கு மேல் சத்தத்தை வைத்துக் கேட்பதாலும் கவனம் சிதற வாய்ப்பு இருக்கிறது.
கவனிக்க:
இவற்றை நாம் சாதாரணமாக தினசரி செய்துகொண்டுதான் இருக்கிறோம். இதுவரையில் எதுவும் நிகழவில்லையென்பதால் இனியும் இதனைத் தொடர்ந்து செய்வது நமக்கு நாமே அபாயத்தைத் தேடிக்கொள்வதாகும். வண்டி ஓட்டும்போது முழுக்கவனத்தையும் சாலையில் செலுத்தி, பாதுகாப்பாக வண்டி ஓட்டவேண்டியது மிகவும் அவசியம்.
No comments:
Post a Comment